Saturday, November 7, 2009

சென்ற வார விடுமுறை நாட்களில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது வீட்டு டிவி பிண்ணனியில் அதிகமாய் அலறிக்கொண்டிருந்தது. அவருடன் பேச ஆரமித்ததிலிருந்து எனது முதன்மையான கவனம் பிண்ணணியில் (அவரது குரலே பின்ணணி!!!) ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பர சத்தத்திலேயே நிலைத்திருந்தது. மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் ஒலியை குறைத்துக்கொள் என்று வேண்டுகோள் விடுக்க முடியவில்லை. செல்போன் என்ற சௌகரியமான சாதனத்தால் அவர் என்னை அந்த விளம்பர சத்தத்திலிருந்து விடுபட வைத்து அவர் பேச்சை முதன்மைப்படுத்தினார். விளம்பர ஒலி மெல்ல மெல்ல கறைந்து எனது கவனம் அவர் பேச்சில் செல்லவிருந்த சமயம் காதில் விழுந்த பாட்டால் மீண்டும் நண்பரின் குரல் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

நல்ல வேளையாய் அந்தப்படத்தைப் பற்றியும், பாட்டப்பற்றியும் பேச்சு திரும்பியதால் மீண்டும் நண்பரின் குரல் முதன்மைப்பட்டது. ஒருவேளை நண்பர் டிவியை விட்டு நகராமல் நின்றிருந்தால் பாட்டில் மனம் லயித்து, அவர் குரல் அரைகுறையாய் கவனிக்கப்பட்டிருக்கும். தப்பினார் அவர்.

அந்த பாடல், உன்னால் முடியும் தம்பியில் வரும் என்ன சமையலோ...என்ற பாடல். பாலசந்தர், கமல், படம் வந்த பழைய காலம் என்று பலதும் சிலாகித்தபின், கல்யாணி, மோகனம், வசந்தா, மத்தியமாவதி என்று ராகமாலிகையாய் வார்த்தை, காட்சி, கதை என்று கவனித்து பார்த்து பின்னி பிணைத்து இசையமைத்த இளையராஜாவை பற்றி என்ன சொல்ல என்றேன் நான். நண்பர் எனக்கு எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் வசந்தாமணியைத்தான் தெரியும் என்ற ரீதியில், எனக்கு கல்யாணியையும், வசந்தாவையும் சத்தியமாய் தெரியாது என்று வழக்கம் போல் முடித்துக்கொள்ள நானும் வழக்கம்போல ஏண்டா சொன்னோம் என்று நொந்து நூலானேன்.

நன்கு இசையை ரசிக்கும் என் நண்பர்களில் பலர், ஏனோ ரசிப்பை மேம்படுத்திக்கொள்ள ஆழச்செல்ல ஆர்வப்படுவதில்லை. அவர்களுக்காய் இந்தப்பதிவு (அப்பாடா, ஒரு வழியாய் பதிவுக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்)

ராகமாலிகை என்பதை தாண்டி, இப்பாட்டில் "சாதம் ஆக தாமதமா" என்ற வாலியின் வரியைக் கூட ராஜா "சா தா மா கா, தா மா தா மா" என்று கல்யாணியில் ஸ்வர வரிசைப்படுத்தி பிரமாதப்படுத்தி இருப்பார். இப்பாட்டை பல முறை நீங்கள் கேட்டிருந்தாலும், ஸ்ரவம் என்பதால் ஒருவித அசௌகரியமாய், வேண்டாத, புரியாத சமாச்சாரமாய் ஒதுக்கி இருந்தால் அடுத்த முறை கேட்கும் பொழுது கவனியுங்கள். புரிந்து கேட்பதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதும் புரியும். பாலசந்தர் மாதிரி ஆட்களுக்கு மட்டுமே இந்த மாதிரி தேவையானதை சரியாய் இளையராஜாவிடம் கேட்டுப்பெற தெரிந்திருக்கிறது என்பது அவர் படங்களை பார்த்தால் தெரியும். கற்றாரே கற்றாரே காமுறுவர்?

பாட்டில் உள்ள டெக்னிகல் சமாசரங்களை அறிய முற்படும் காலங்களில், அதை முழுமையாய் ரசிக்க இயலாமல் போவது தவிர்க்க இயலாதது. இதை தவிர்க்க பலமுறை கேட்க முற்படலாம். அறிந்து கொள்ள, கொள்ள நன்றாய் ரசிக்கலாம் என்பதை தவிர, நல்ல இசை, கேட்ட இசை என்ற பாகுபடுத்துதல் எல்லாம் தேவையில்லாதது. Simple definition ஆய் மனதை கிளரும் (நவரசத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்) இசையே நல்ல இசை என்பதாய் என்பதாய் எனது எண்ணம். ரசனையும், இசையும் கால நேரங்களுக்கு உட்பட்டது. என் அப்பா, ரேடியொவில் ரசித்த பல பாடல்களை ரசிக்க விடாமல், ரேடியொவின் கழுத்தை அன்னாட்களில் நெறித்த நான் தற்பொழுது அதில் ரசிக்க பல விஷயங்கள் இருப்பதை உணருகிறேன். என் நண்பர், காதல் தோல்வியில் இருந்த பொழுது உருகி உருகி ரசித்த ரோஜா பட "காதல் ரோஜாவே" பாட்டை அவரால் Ipod சகிதம் பிசினஸிற்காய் ஊரூராய் சுற்றும் பொழுது ரசிக்க இயலவில்லை. கேட்டால் அது எல்லாம் ஒரு காலம்டா என்பார்.

ராகம், ஸ்வரம், ஸ்ருதி போன்ற இசையின் அடிப்படை வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாமல் அபாரமாய் எல்லா இசையும் ரசிக்கும் என் நண்பர்களை குழப்புவதற்காய் என்னால் ஆன முயற்சி கீழே.

ஸ்ருதி - ஆதார சப்தம். இதன் அடிப்படையாய் பிற சப்தங்கள் ஒரு வறைமுறைக்குட்பட்டு எழுப்பப்பட அது இசையாகிறது. Commonly refers musical pitch. determined by auditory perception
ஸ்வரம் - ஒரு இசையின், சப்ததின் ஒரு சிறிய பகுதி. Type of musical sound for a single நோட்
ராகம் - ஒரு சட்டத்திற்கு உட்பட்ட, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சத்தம்.
தாளம் - குறிப்பிட்ட கால இடைவேளையில் ஓரே சீராய் தட்டி எழுப்பப்படும் ஓசை என்பதாய் கொள்ளலாம்
ராகமாலிகை - பல ராகங்களின் சேர்க்கை
பல்லவி - பாடலின் முதன்மையான வரிகள்
அனுபல்லவி - பல்லவிக்கு அடுத்து வருவது
சரணம் - பாடலின் கருத்துப்பகுதி

இசையை புரிந்து ரசிக்க முயற்ச்சிகிறேன் என்பதை தாண்டி "சாமி சத்தியமாய்" எனக்கு எதுவும் தெரியாதுங்கோ...நல்லா தெரிஞ்சவங்க ஏதாவது எதாவது குத்தம் குறை இருந்தா சரியாய் சொல்லிக்கொடுத்து, மனிச்சு விட்டுடுங்கோ சாமியோவ்.....